வெள்ளி, 7 அக்டோபர், 2016

வாக்காளப்பெருமக்களே

வாக்காளப் பெருமக்களே….!
திருவண்ணாமலை. பொழுது கொஞ்சம் கொஞ்சமாக புலர்ந்து கொண்டிருந்தது. அண்ணாமலையார் திருப்பள்ளி எழுச்சி இனிமையான தமிழால் அமுதமாகக் காதில் விழுந்தது. சுயம்பு நாடார் படுக்கையில் இருந்து எழுந்து கொண்டார். தெரு களைகட்டிவிட்டது. ஜன்னல் வழியே பார்த்தபோது பெண்கள் காலையிலேயே குளித்துவிட்டு கோலமிட்டுக் கொண்டிருந்தனர். பால்காரர்கள் மாடுகளை ஓட்டிச்சென்றனர். எதிர்ச்சுவர் அருகில் சிலர் கூட்டமாய்…. என்ன நடக்கிறது.. எட்டிப் பார்த்தபோது… புரிந்தது… கட்சியாட்கள்.. சுவரில் வெள்ளையடித்து இடம் பிடிக்கிறார்கள். தேர்தல் வருகிறது…
ஆணவமும் அகங்காரமும் சுயநலமும் ஊழலும் கொள்கைகளாகக் கொண்டுள்ள அரசியல்வாதிகளுக்காக தேர்தல் வருகிறது. இந்தத் தேர்தல்கள் நாட்டிலே சாதித்தது என்ன? சாமானியனின் வாழ்க்கைத்தரம் கடுகளவாவது உயர்ந்திருக்கிறதா? இலவசத் திட்டங்களால் அவனைப் பிச்சைக்காரனை விட கேவலமானவனாக்கி ஓட்டுக்காக அவனை அடகு வைத்தார்களே… அதற்காக உறவாட வருகிறார்களா? மதவேற்றுமையை உருவாக்கி சகோதரனோடு சகோதரனை மோதவிட்டு வேடிக்கை பார்த்த கயவர்களுக்காக தேர்தல் வருகிறது. “யாதும் ஊரே… யாவரும் கேளிர்…” என்ற மூத்த தமிழனின் சொல்லை மறந்து தற்குறிகளாக  மாறி, சினிமா கவர்ச்சிக்கும் இமல்டாமார்க்கோஸைவிட மிஞ்சிய ஆடம்பரங்களுக்கும் சாராயத்திற்கும் பலியாகிப் போன மானிடப்பிண்டங்களுக்காக தேர்தல் வருகிறது…
சுயம்பு நாடாருக்கு ரத்தக்கொதிப்பு ஏறியிருந்தது. ஒரு மாத்திரையை எடுத்துப் போட்டு மீண்டும் கட்டிலில் படுத்தார். மனம் அமைதிக்கு வர மறுத்தது. அறையில் தந்தை பெரியாரும்… காமராஜரும்…. தந்தை பெரியார் கண்ட கனவு ஏதேனும் தமிழகத்தில் பலித்திருக்கிறதா..? சுயமரியாதைச் சிங்கங்கள் எங்கு தொலைந்து போனர்கள். ஈழத்திலே அடிபட்டு மிதிபட்டு உரிமை மறுக்கப்பட்டு நாயினும் கடையவனாக ஆக்கப்பட்டானே ஈழமண்ணின் உரிமையுள்ள மகன்… அவனுக்காக ஆட்சிபீடமேறியபின் குரல் கொடுத்தார்களா…? பதவி சுகம் பதர்களைப் போல அவர்களை ஆக்கியதா…? தமிழா உன்னை எவனாவது ஆண்டதாக வரலாறு இருக்கிறதா…? நீ உன் உரிமைகளைப் போராடிப் பெற ஏன் தயங்குகிறாய்…? மேற்கு நோக்கி கடலில் கலக்கும் நதிகளில் இருந்து ஒரு சொட்டு நீர் உனக்கு தருவதற்கு அவர்களுக்கு மனமிருக்கிறதா…? நீ ஏன் உன்னிடமுள்ள கார்னைடு மணலையும், பெட்ரோலையும், மின்சாரத்தையும் எல்லோருக்கும் தரவேண்டும்… உனது உரிமை எவை எது என்று கண்டறியும்  ஆற்றலையுமா இழந்து போனாய்..? தன்னலமில்லாமல் வாழ்ந்து காட்சிக்கு எளிமையாய் தாழக்கிடந்தவர்களை தட்டி எழுப்பின ஈரோட்டுச் சிங்கம் மாதிரி எந்தத் தலைவனும் உண்டா…?
இதோ இந்த காமராஜர் ஏழைகளுக்காகவே வாழ்ந்து ஏழையாகவே மறைந்தவர். அவரது வாழ்க்கை ஒரு யோகியைப் போல. தந்தை பெரியாரும் பசும்பொன் தேவர் அய்யா அவர்களும் காமராஜர் மீது எத்தனை நல்லெண்ணம் வைத்திருந்தார்கள்.
சுமார் முப்பது வருடங்களுக்கு முன்னால் ஒரு தடவை காமராஜர் திருவண்ணாமலை வந்திருந்தார். சுயம்பு நாடாருக்கு அப்போது நல்ல இளம் வயது. மாவட்டத் தலைவரிடம் தனது விருப்பத்தைச் சொன்னார். ‘தலைவருக்கு ஒரு வேளை சாப்பாடு தர விரும்புகிறேன்…’ மாவட்டத் தலைவர் நல்ல மனிதர். ஒரு சாதாரணனின் வேண்டுகோளை புறக்கணிக்கவில்லை. தலைவரிடம் அழைத்துப் போனார். தலைவரை நேரில் பார்த்தபோது சுயம்பு நாடாருக்கு பேச்சு வரவில்லை. ஆண்சிங்கம்; ஒன்று அரியணையில் இருந்தது போல் இருந்தது. அவரது கண்பார்வையில் ராஜாளியின் கூர்மை…..
‘என்ன விஷயம்…’
நல்ல முரட்டுக் குரல் தலைவருக்கு.
“உங்களுக்கு ஒருவேளை சாப்பாடு தரணும்னு பிடிவாதம் பிடிக்கிறார் அய்யா…”
“எதுக்கப்பா எனக்கு சாப்பாடு தரணும்னு நினைக்கிறே…”
“அய்யா நான் பாத்திரக்கடையில் சம்பள ஆளாத்தான் வேலை செய்யறேன். என்னால உங்களுக்கு பணம் காசு தரமுடியாது. ஒருவேளை சாப்பாடு தந்தேன்னா… அதைவிட மகிழ்ச்சியான விஷயம் எனக்கு வேறு இல்லை…”
“நல்லது… மதியச் சாப்பாடு நான்கு பேர் சாப்பிடற மாதிரி கொண்டுவா…”
சுயம்பு நாடாருக்கு உலகமே தன் வசம் வந்தது போல் இருந்தது. மதியம் அடுக்குகளில் சாப்பாடு எடுத்துப் போனார். தலைவர் அவரது நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு நேரம் தாழத்தான் வந்தார். தலைவரோடு ஜந்து பேர் அமர்ந்து கொண்டார்கள். நல்ல தலை வாழை இலையாகப் போட்டார். பரிமாறினார். தலைவர் சாப்பிடச் சாப்பிட சுயம்பு நாடாரிடம் பேச்சுக் கொடுத்தார்.
“எந்த ஊரு.”
“திருநெல்வேலி மாவட்டம் நவ்வலடி அய்யா…”
“கேள்விப்பட்ட மாதிரி இருக்கே…”
“திசையன்விளைக்கு பக்கத்து ஊருங்க அய்யா…”
“அதானே.. நிறைய தடைவ அந்த வழியா வந்திருக்கேன்… தம்பி கருத்தையா அங்கேதானே இருக்கான்… ஏதாவது செய்யறானா….”
“அவரை மாதிரி ஆளுங்க கிடைச்சது பெரிய புண்ணியம்ங்க அய்யா….”
“உனக்கு பிள்ளைங்க எத்தனை..?”
“ஒன்பதுங்க அய்யா…”
“நிறைய பெத்துகிட்டிருக்கே…!”
கொஞ்ச நேர மௌனம்.
“காங்கிரஸ் கட்சிக்கு என்ன பண்ணியிருக்கே…?”
“தேர்தல் நேரத்திலே பத்து நாள் லீவு போட்டுட்டு தெரு பூரா கொடி கட்டுவேன். நோட்டீஸ் ஒட்டுவேன். சைக்கிள்லே ஒலிபெருக்கி வச்சிட்டு சுத்துவேன்…”
“ஒன்னை எவண்டா காசு பணம் செலவு பண்ணச் சொன்னது. முட்டாள்… அறிவு கெட்டவனே… பார்க்கிறது பாத்திரக்கடை வேலை… நிறைய பிள்ளைங்க வேற… இந்தா கேட்டுக்க.. உன் பிள்ளைகளை நல்ல முறையிலே படிக்க வை… அறிவு சொல்லிக் கொடு… அதுதான் தேசத்திற்கு செய்யற பெரிய தொண்டு. அவன் அவன் பாடு படற காசை பாழாக்காம குடும்பத்தை கவனிச்சி பிள்ளைகளையும் கவனிச்சா தேசம் தன்னாலே முன்னுக்கு வந்திரும்… ராப்பகலா உழைச்சி ஒரு கடையை வைக்கப்பாரு. என் கொள்கைகள் பிடிச்சிருந்தா உன் வாக்கு சீட்டை எனக்குப் போடு, புரிஞ்சுதா.. அக்கம் பக்கத்துல இணக்கமா நடந்துக்க… எல்லாரும் சகோதரங்கதான்…”
ஒரு சாதாரணமானவனான தன்னிடம் பெற்ற தந்தையைப் போல் பரிவு காட்டி புத்தி சொல்லிய மாபெரும் தலைவனைப் போன்ற ஒருவனை எந்தப் பிறவியில் தேடுவது… என்ன எளிமை.. கருணை… தெளிவு…  ஒவ்வொரு பிள்ளைகளுக்கும் புத்தி சொல்லி கொடுத்தால் தேசத்துக்கே அறிவு சொன்ன மாதிரி என்பதை எவ்வளவு அழகாகச் சொன்னார்.
சுயம்பு நாடாருக்கு கட்டிலில் படுத்தபடியே நெஞ்சுவிம்ம அழுகை வந்தது. காமராஜரின் தியாகத்தில் ஆயிரத்தில் ஒன்றையாவது நாட்டு மக்களுக்குத் தருபவர்கள் நாட்டில் யாராவது உண்டா?
வெளியே தேர்தல் பிரசார வண்டி ஒன்று ‘வாக்காளப் பெருமக்களே…’ என்ற அழைப்புடன் சாலையைக் கடந்து கொண்டிருந்தது.
.................................................................................................................................................................................

தேவி
11.08.99

பிராயச்சித்தம்

பிராயச்சித்தம்
     தஞ்சாவூர் எஸ்.பி. அலுவலகம். எஸ்.பி. காலை ஒன்பது மணிக்கே வந்து விட்டார். எல்லா செக்ஷன்களும் பரபரப்பும் சுறுசுறுப்புமாய் இயங்கத் துவங்கின. பத்து மணிக்கு அந்த போன் வந்தது. எஸ்.பி.யே போனை எடுத்தார்.
     “எஸ்.. எஸ்.பி. ஸ்பீக்கிங்!”
     “சார், ராஜராஜசோழன் நகர்லே இருந்து பேசறோம்.”
     “யார் பேசறீங்க?”
     “என் பேரு ராமதுரை சார். அந்தப் பகுதியிலேதான் குடியிருக்கேன்…”
     “என்ன விஷயம்…?”
     “எங்க ஏரியாவுலே அம்மன்கோயில் இருக்கு சார். அதுக்கு கொஞ்சம் கிழக்கே ஒரு வீட்டுல சாராய வியாபாரம் புதுசா ஆரம்பிச்சிருக்காங்க. வீட்டு நம்பர் 113. ஏரியா மக்கள் மத்தியிலே இதற்கு எதிர்ப்பு கிளம்பி அடிதடி ஆகிப்போச்சி சார். சாராயம் வித்த ஆளை தூண்ல கட்டி வச்சிருக்கோம். உங்களுக்குத் தகவல் தரச்சொன்னாங்க…”
     எஸ்.பி. தனது எதிரில் அமர்ந்திருந்த ஏ.எஸ்.பி. மார்ட்டினை ஏறிட்டார். மார்ட்டின் பயிற்சிக்காகத் தஞ்சாவூர் வந்து ஒருவாரம் இருக்கும்.
     “ராஜராஜசோழன் நகர்லே, அம்மன் கோவில் பக்கத்திலே 113-ம் நம்பர் வீடு. அங்கே சாராயம் வித்ததா வீட்டுக்காரனை ஏரியாக்காரங்க பிடிச்சி அடிச்சி கட்டி வச்சிருக்காங்களாம். நீங்க போயி அட்டெண்ட்பண்ணி மெஸேஜ் கொடுங்க. தகவல் சொன்னவர் பெயர் ராமதுரை.”
     “எஸ் சார்”
     பதினைந்து நிமிடங்களில் இரண்டு ஜீப்புகளில் போலீசார் ராஜராஜசோழன் நகருக்கு விரைந்தனர். முதல் ஜீப்பில் இன்ஸ்பெக்டரும் போலீஸ்காரர்களும் இருக்க இரண்டாவது ஜீப்பில் ஏ.எஸ்.பி. மட்டுமே அமர்ந்திருந்தார். நகரில் குறிப்பிட்ட வீட்டருகே கூட்டம் இருந்தது. வெளியில் டெலிபோன் கம்பத்தில் சாராயம் விற்றதாகக் கூறப்படும் நபரைக் கட்டி வைத்திருந்தார்கள். உடலெல்லாம் செமத்தையாக அடிவிழுந்ததற்கான அடையாளங்கள் தெரிந்தன. வாயில் இருந்து ரத்தம் கசிந்து கொண்டிருந்தது. அவரது அருகில் இளம் பெண் ஒருத்தியும் வயதான பெண் ஒருத்தியும் கதறி அழுது கொண்டிருந்தனர். ஏ.எஸ்.பி. ஜீப்பில் இருந்து இறங்கியதும் போலீசார் கூட்டத்தை விலக்கினார்கள்.
     ஏ.எஸ்.பி. யை நெருங்கிய அந்த வயதான பெண் கால்களில் விழுந்து மார்பில் அடித்துக் கொண்டாள்.
     “என் புருஷன் சாராயம் விக்கலே எசமான். இந்த ஊரு பாண்டிவளவன் ஏற்பாடுங்க இது தர்மதுரை…. என் மகளை எப்படியாவது கெடுத்துப்புடனும்ணு திட்டம் போட்டிருக்கான் ஜயா. பிழைக்க வந்தவங்களுக்கு வேற அடைக்கலம் இல்லே சாமி. இப்ப தன் ஆளுங்களை வச்சி, பத்துப் பதினைஞ்சி பேரை குடிக்கவும் வச்சி, இவரை அடிச்சி கட்டிவச்சிட்டாங்க எசமான்!”
     “இன்ஸ்பெக்டர், முதல்லே இவரை ஹாஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணிருங்க. இவருக்கு இப்ப உடனடி சிகிச்சை தேவைப்படலாம். இவருகூட யாராவது பக்கத்து வீட்டுக்காரர் போகட்டும். இவரு மனைவியையும் மகளையும் விசாரிச்ச பிறகு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கலாம்.”    
     “வீட்டைப் பார்த்திருவோமா?”
     ஏ.எஸ்.பி. கேட்க இன்ஸ்பெக்டர் தலையை அசைத்தார்.
     பெரியம்மாவைக் கூப்பிடுங்க”
     அந்தப் பெண் அழுது கொண்டே உள்ளே வந்தாள்.
     “வீடு சொந்த வீடா?”
     “வாடகை வீடுங்க.”
     “எவ்வளவு வாடகை?”
     “நூறு ரூபாய்ங்க.”
     “எவ்வளவு நாளா சாராய வியாபாரம் பார்க்கறிங்க?
     “என் தாயி மீனாட்சி சத்தியமா நாங்க சாராயம் விக்கலீங்க. பாண்டிவளவன் எங்களை மிரட்டறதுக்குச் செஞ்ச வேலைங்க  சாமி.”
     “யார் இந்தப் பாண்டிவளவன்?”
     இன்ஸ்பெக்டர் பதில் சொன்னார்…
     “கட்சியிலே கொஞ்சம் செல்வாக்குள்ளவருங்க. பெரிய ஆளுங்க பழக்கம் உள்ளவரு.”
     “அவரு என்ன தொழில் பார்க்கிறாருஃ”
     “டவுன்ல இரண்டு பிராந்தி கடை இருக்கு. கள்ளச்சாராயம் தயாரிச்சி விக்கிறதாகவும் வெளியில பேசிக்குவாங்க.”
     “அந்தாளு மேலே முன்னால ஏதும் கேஸ் இருக்குதா?”
     மேல்மட்ட செல்;வாக்குள்ளவரு. எஸ்.பி.கூட அவருமேல நடவடிக்கை எடுக்கப் பயப்படுவாரு. கேஸ் போடறதா இருந்தா நிறைய போட்டிருக்கலாம் சார்.
     “ஏம்மா உன் புருஷனுக்கு என்ன வேலை?”
     “டவுன்லே ஒரு கம்பெனியிலே வாட்ச்மேன் சாமி.”
     “எத்தனை புள்ளைங்க?”
     “ஓரு பொண்ணும் ஒரு ஆணும்.”
     “பையன் என்ன பண்றாரு?”
     “கல்யாணம் ஆயிப் போச்சு. பெஞ்சாதி புள்ளைகளோட கிராமத்துல இருக்கான். எங்ககூட ஒட்டுறவு கிடையாது சாமி.”
     “உன் பொண்ணு ஏதாச்சும் வேலை பார்க்குதா?”
     “தையல் தைக்கும்”
     வராந்தாவுக்கு வந்தார் ஏ.எஸ்.பி.
     “பக்கத்து வீட்டுக்காரங்களை கூப்பிடுங்க இன்ஸ்பெக்டர்!”
     வந்தவர்கள் பயந்து போயிருந்தார்கள்.
     “இங்கே சாராய வியாபாரம் நடக்கிறது வாஸ்தவம்தானா?” ஏ.எஸ்.பி. கேட்டார்.
     “சே! சே! ஒரு பாவமும் அறியாத ஆளுங்க அவங்க….”
     ஏ.எஸ்.பிக்கும் அந்த நம்பிக்கை வந்தது. தூணில் கட்டிவைக்கப்பட்டிருந்த பெரியவரும் அந்த வயதான பெண்ணும் சாராயம் விற்றிருப்பார்கள் என்று நம்ப முடியவில்லை. சற்று தள்ளி கூட்டமாக நின்று கொண்டிருந்தவர்களை நெருங்கினார்.
     “ராமதுரைங்கறவரு யாரு…?
     பதில் இல்லை.
     இன்ஸ்பெக்டரின் காதில் கிசுகிசுத்தார்.
     “அந்;தாளுதான் மெசென்ஜர்.”
            “பாண்டிவளவன் ஆளுங்களாத்தான் இருக்கும் சார்.”
     மீண்டும் 113ம் நம்பர் வீட்டுக்கு ஏ.எஸ்.பி. வந்தார்.
     நடுஅறையில் இருந்த ஸ்டூலில் அமர்ந்து கொண்டார்.
     “ஏம்மா, ஏதோ உன் பொண்ணை கெடுக்கறதுக்கு திட்டம் போட்டான்னியே என்னது அது? எங்கே உன் பொண்ணு கூப்பிடு!”
     அந்த இருபத்தைந்து வயதுப் பெண் பெண்கள் கூட்டத்தில் இருந்து பயந்து நடுங்கியபடி தாயிடம் வந்து ஒண்டிக் கொண்டாள்.
     ஏ.எஸ்.பி. யின் விழிகள் அவளை அளவெடுத்தன. அழகான முகம், சந்தனநிறம், சுருள் முடி, வலதுபக்கக் கன்னத்தில் பெரிய மச்சம் இருந்தது.
     ஏ.எஸ்.பி. யின் விழிகளில் மாறுதல். அமர்ந்தவர் எழுந்து கொண்டார். அவரது பார்வை இன்னும் கூர்மையாகியது. அவளை பக்கத்தில் நெருங்கினார், “உன் வலது கையைக் காட்டு!’
     அவள் தனது வலது கையை அவரை நோக்கி நீட்ட, அதில் நீளமாய் தீப்பட்டகாயம் இருந்தது.
     ஏ.எஸ்.பி. யின் குரல் கம்மியது. அவளது இரண்டு கரங்களையும் ஆதுரத்துடன் பற்றிக்கொண்டு…
     “ஏம்மா, ஒரத்தநாடு ராணிதானே நீ….?”
     “நீங்க… நீங்க….
     அவளும் அந்த வயதான பெண்ணும் தடுமாற.
     “என்னையத் தெரியலே?..”
     “இல்லையே.”
     வயதான பெண்ணின் கரத்தைப் பிடித்து கண்களில் ஒற்றிக் கொண்டார்.
     “ராணி உனக்குமா தெரியலே…. உன் அண்ணம்மா!
     நாகர்கோவில் அண்ணன், மார்ட்டின்.”
     அவர்களுக்கு நினைவு வந்துவிட்டது. பதினேழு வருடங்களுக்கு முன்னால் தஞ்சாவூர் பஸ்-ஸ்டாண்டில் வீட்டை விட்டு ஒடிவந்து அழுது கொண்டிருந்த சிறுவன் மாhட்டினை வீரபாண்டித்தேவர் நெல் வியாபாரம் முடிந்து திரும்பும்போது பார்த்து வீட்டுக்கு அழைத்து வந்தது நினைவுக்கு வந்துவிட்டது.
     “என் மகனே.. நீ தானா ராசா?”
     அவள் ஏ.எஸ்.பி.யைக் கட்டிக் கொண்டு கதறிக் கதறி அழ, ஏ.எஸ்.பிக்கும் கண்ணீர் வந்தது. மார்ட்டினை ஏ.எஸ்.பி. உடுப்பில் பார்த்துப் பிரமித்துப்போன ராணிக்கும் அழுகை வந்தது.
     மார்ட்டின் ஒரத்தநாடடில் தங்கள் வீட்டுக்கு வந்த போது பதின்மூன்று வயதிருக்கும். அவளுக்கு எட்டு வயது. மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாள். மார்ட்டின் தாய்-தகப்பன் இல்லாத அனாதை என்றும், நாகர்கோவிலில் வேலை செய்த வீட்டில் கொடுமை தாங்காமல் ஒடி வந்ததாகவும் முதலில் சொன்னான். வீரபாண்டித் தேவர் அவன் அழுக்கடைந்த உடுப்பைப் பார்த்து முதலில் இரண்டு செட் துணி எடுத்து வந்து கொடுத்தார். நான்கு நாட்கள் அவர்கள் வீட்டில் அவன் பாசத்துடன் உபசரிக்கப்பட்டான். ராணி அவனோடு நன்றாக ஒட்டிக் கொண்டாள். சின்ன அண்ணா, சின்ன அண்ணா என்று அவனிடம் மிகப் பிரியம் வைத்தாள். அவள் கன்னத்து மச்சமும் குறும்புத்தனமான பேச்சும் மார்ட்டின் மனதில் பதிந்து போயிற்று.
     ஒரு நாள் விளையாட்டில் அடுப்படியில் விழுந்ததில் விறகுக் கங்கு விழுந்து அவள் கையில் தீக்காயம் பட, அவள் அழ… அவன்… அழ… வீரபாண்டித்தேவர் இருவரையும் சமாதானப்படுத்தினார்.
     வீரபாண்டித்தேவரும் அவர் மனைவியும் ஒரத்தநாட்டில் வசதியாக இருந்தார்கள். நெல்லும், வாழையும் அவர்கள் இல்லத்தை செழிக்க வைத்திருந்தது. தங்கியிருந்த நான்கு நாட்களிலும் எத்தனை ஏழை பாழைகளுக்கு தேவர் வீட்டம்மாள் வயிறு நிறைய சோறு போட்டிருப்பாள்! அவளது கழுத்திலும் காதிலும் தங்கமாக அல்லவா நிறைந்திருக்கும்.
     ஜந்தாவது நாள் வீரபாண்டித் தேவர் கையில் பேப்பருடன் வந்தார். பேப்பரில் மார்ட்டின் படம் ‘காணவில்லை’ பகுதியில் பெரிதாக இடம்பெற்றிருந்தது. வீரபாண்டித்தேவர் அதட்டிக் கேட்டபோது மார்ட்டின் அழுதுகொண்டே உண்மையைச் சொன்னான். பரீட்சையில் பெயிலாகிவிட்டதால் அப்பா திட்டினார் என்றும், அதனால் ஓடி வந்ததாகவும், தஞ்சாவூர் பஸ்-ஸ்டாண்டில் பணமும் துணியும் களவுபோன விபரத்தையும் தெளிவாகச் சொன்னான்.
     வீரபாண்டித்தேவர் கணமும் தாமதியாது நாகர்கோவிலுக்கு கடிதம் எழுத, மூன்றாம் நாள் மாலை அவரது வீட்டருகே கப்பல் போன்ற பென்ஸ்கார் வந்தது. காரில் இருந்து ஓடி வந்த மார்த்தாண்டம் எஸ்டேட் அதிபர் தாசன் நாடாரும் அவரது மனைவியும் மார்ட்டினை கட்டிக் கொண்டு பிழியப் பிழிய அழுதனர். அவர்கள் தேவரையும் அவரது மனைவியையும் வெகுவாகப் புகழ்ந்தார்கள். நன்றி சொன்னார்கள்! ராணிக்கும் அழுகை வந்தது. மார்ட்டின் தனது தாய்-தந்தையோடு போய்விடுவான் என்பதை தாங்கிக்கொள்ள இயலாமல் கேவிக் கேவி அழுதாள். மார்ட்டின் அவளை அணைத்துக் கொண்டு,
     “சின்னப் பாப்பாவை பார்க்க பெரிய லீவுலே வருவேனாக்கும் அழாதே கண்ணு!” என்று தேற்றினான்.
     மார்ட்டின் வீடு திரும்பிய பிறகு அவ்வப்போது ஒரத்தநாட்டிற்கு கடிதம் போடுவான். பதிலும் வரும். காலம் விரைந்து சென்றது. தாசன் நாடார் மகனின் மேல் விஷேச அன்பு செலுத்தினார். மார்ட்டினும் நல்ல பிள்ளையாய் படித்தான், வளர்ந்தான், ஐ..பி.எஸ். பாஸ் பண்ணினான். இவ்வளவு கால ஓட்டத்தில் ஒரத்த நாட்டிற்கு கடிதப் போக்குவரத்து நின்று போயிற்று. மனதில் வீரபாண்டித்தேவரும், அன்னையும், ராணியும் எப்போதும் நினைவுக்கு வருவதுண்டு, வீரபாண்டித்தேவர் மகன் அப்போதும் வீட்டுக்கு அடங்காதவன். இப்போதும் அப்படித்தான் போலும். தஞ்சாவூருக்கு ஏ.எஸ்.பி.யாக போஸ்டிங் ஆனதும் இரண்டாம் நாள் ஒரத்தநாட்டுக்கு சென்று வந்தான். வறட்சியால் விவசாயம் அடிபட்டுப்போக வீரபாண்டித்தேவரின் குடும்பம் தஞ்சாவூர் குடிபெயர்ந்த விவரத்தை அங்கு சொன்னார்கள். அவர்களை இந்த நிலையில் சந்திப்போம் என்று மார்ட்டின் நிச்சயமாக எதிர்பார்த்திருக்கவில்லை.
     ராணி கதறியபடி அவனது காலில் விழ, தேவரம்மாள் ஏ,எஸ்.பி.யை இன்னும் கட்டிப்பிடித்தபடி கதறிக் கொண்டிருந்தாள். வாசலில் அம்பாஸிடர் ஒன்று வந்து பிரேக் போட்டது. பாண்டிவளவன் டெட்ரக்ஸ் சட்டை, பாலியெஸ்டர் வேட்டியில் நான்கைந்து பேரோடு கம்பீராமாக நடந்து வந்தான்.
     “மிஸ்டர் ஏ.எஸ்.பி. நான் தான் பாண்டிவளவன்! நடவடிக்கை எடுத்தாச்சா…?”
     ஏ.எஸ்.பி. பாண்டிவளவனை பொங்கி வந்த கோபத்துடன் பார்த்துக் கொண்டே தேவரம்மாவிடம்,
     “ராணிகிட்டே என்ன வம்பு பண்ணினான். இந்த ஆளு…? என்றார்.
     “இந்த ஏரியாவிலேயே நாலு பொண்ணுகளை அதிகாரம் பண்ணி சீரழிச்சிருக்கான் தம்பி. ராணி வீட்டுல தனியா இருக்கும்போது பலாத்காரம் பண்ணப் பார்த்திருக்கான். அவ இவன செருப்பால அடிச்சி விரட்டிப்புட்டா. அதுக்காக எப்படியாவது அவமானப்படுத்தி காலடியில விழ வைக்கிறேனா இல்லையான்னு சபதம் போட்டு செஞ்சிருக்கான் தம்பி”
     “நான் யாருங்கறதை இன்ஸ்டெக்டர் சொல்லியிருப்பாரே… பாண்டிவளவன் மீண்டும் வார்த்தைகளைச் சிந்த ஏ.எஸ்.பி. தன்னை மறந்து ஓங்கி ஒரு அறைவிட்டார்.
     “இன்ஸ்பெக்டர், இந்த ஆளையும் கூட வந்திருக்கிறவன்களையும் இம்மிடியட்டா அரெஸ்ட் பண்ணுங்க! மிச்ச மீதி இருக்கிற அவன் கூட்டத்தையும் இரண்டு மணி நேரத்தில் பிடிச்சிரணும்.
     பாண்டிவளவனையும் அவன் ஆட்களையும் போலீஸ்காரர்கள் சூழ்ந்து கொள்ள, “என் மேலேயா கைவச்சிட்ட உன் சீட்டை கிழிக்கிறேனா இல்லையாபார்.”
     ஏ.எஸ்.பி. யின் கரம் மீண்டும் உக்கிரமாக அவன் தாடையில் பாய்ந்தது. போலீஸ்காரர்கள் பாண்டிவளவனையும் அவன் ஆட்களையும் ஜீப்பில் ஏற்றினார்கள். பாண்டிவளவனை அறைவிட்டு ஜீப்பில் ஏற்றிய ஏ.எஸ்.பி.யை கூட்டம் பிரமிப்போடு பார்த்தது. இன்ஸ்பெக்டருக்கு ஏ.எஸ்.பி நெருப்போடு விளையாடுவதாகத் தோன்றியது.
     ஏ.எஸ்.பி மார்ட்டினுக்கும் நிலமை விளங்காமல் இல்லை. தன்மீது பெரிய ஆட்களின் அதிகாரம் பாய்ந்து விசாரணை மேற்கொள்ளப்படலாம். தஞ்சாவூரில் இருந்தே அனுப்பப்படலாம். எப்படி ஆனாலும் ஆகட்டும். சமூகவிரோத செயல்களைச் செய்யும் எவராக இருந்தாலும் தனது அதிகாரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அப்படிப்பட்ட மிருகங்கள் எந்தப் போர்வையில் இருந்தாலும் அவர்களை தொலைத்துக் கட்டுவதுதான் முதல் வேலையாக இருக்கும். இதில் பதவியே போனாலும் சரி. மனதுக்குள் கருவிக் கொண்டான் மார்ட்டின், “ஆத்தா. ராணிம்மா வண்டியிலே ஏறுங்க அய்யாவை பாhத்திட்டு வருவோம்.” தேவரம்மாள் ஏ.எஸ்.பி. யின் பக்கத்தில் கம்பீரமாக ஏறி அமர்ந்துகொள்ள, ராணி ஜீப்பின் பின்னால் ஏறிக்கொண்டாள். வண்டி விரைந்து கொண்டிருந்தபோது பதினேழு வருடங்களுக்கு முன்னால் தந்தை வீரபாண்டித்தேவரோடு அழுக்கடைந்த உடையுடன் வீட்டிற்கு வந்த மார்ட்டின் அண்ணனின் சிறுவயது தோற்றம் மனதில் தோன்றியது. அவளது பிஞ்சுக் கரங்களைப் பிடித்துக் கொண்டு ஓடி விளையாடிய சம்பவங்கள் நினைவுக்கு வந்தது. பின் அவள் அவன் பிரிவைத் தாங்காமல் அழ, அவளை அணைத்து அவள் கண்ணீரைத் துடைத்த அவனது அன்புக்கரங்கள் கண்முன் எழுந்தது. ஜீப்பை செலுத்திக் கொண்டிருக்கும் ஏ.எஸ்.பி அவளது அண்ணன், நாகர்கோவில் அண்ணன் என்ற எண்ணம் அவளது உள்ளத்தை மீண்டும் சிலிர்க்க வைக்க, தொலைவில் தஞ்சை பெரிய கோவிலின் கோபுரம் கண்களில் தெரிந்தது.
.................................................................................................................................................

இதயம் பேசுகிறது
நவம்பர் 1989
    

     

காகித ஓடங்கள்

காகித ஓடங்கள்
     பொழுது விடிந்தும் விடியாததுமாக கண்ணாமூச்சி காட்டிக்கொண்டிருந்தது. ராமலிங்கம் தூக்கம் வராமல் கட்டிலில் புரண்டு கொண்டிருந்தார்.
     எழுபது வயது தள்ளாமையும், தனிமையும் அவருக்குள் சோகச் சுமைதான். கடந்த காலங்களை மனத்திரைக்குள் அசைபோட்டபோது யாரோ கதவைத் தட்டினார்கள்.
     ‘யாரது…?’ தள்ளாடி எழுந்து கதவைத் திறந்தார்.
     அந்த  அதிகாலை நேரத்தில் பதற்றமான முகத்துடன் மகள் கலைவாணியையும், அவள் குழந்தைகளையும் அவர் எதிர்பார்க்கவே இல்லை. கையில் பெட்டியும் பையும் இருந்தன.
     “என்னம்மா… திடீர்னு…. ஒரு தகவல் இல்லாம…. மாப்பிள்ளை வரலியா.?”
     “பணம்… பணம்னு அடிக்கிறாருப்பா.. இன்னும் இருபதாயிரம் வேணுமாம்… எங்க அப்பாவால எப்படி முடியும்னேன்… செருப்பால் அடிச்சி வெளியிலே துரத்திட்டாரு…”
     அவருக்குத் தூக்கிவாரிப் போட்டது.
     “சரி உள்ளே வா… பார்த்துக்கலாம்…”
     சுவரோரத்தில் மகள் அமர்ந்து கொள்ள, அவள் காலடியில் குழந்தைகள் சுருண்டு கொண்டன.
     காலை முழுமையாய் மலர்ந்தது. பத்து நிமிட அவகாசத்தில் காப்பி போட்டுக் கொடுத்தார். நல்லபசிபோலும். குழந்தைகள் ‘மடக் மடக்’ என்று குடித்தன.
     “உன்னை பெண் கேட்டு வரும் போதே இவ்வளவுதான் முடியும்னு தெளிவா சொல்லி பத்து பவுன் நகை போட்டேன். வீட்டை விற்று இருபதாயிரம் ரொக்கம் கொடுத்து கல்யாணத்தையும் நடத்தி வச்சேன்.
     இப்ப என்கிட்டே சல்லிக்காசு இல்லே… உயிர் மட்டும்தான் ஒட்டிக்கிட்டிருக்கு… அத்தனையும் தெரிஞ்சுமா உன்னை அடிச்சி அனுப்பி வச்சான்…”
     அவளிடம் இருந்து பதில் வரவில்லை.
     “உன் வாழ்க்கை வீணாகிடக் கூடாதுன்னு அப்பப்ப கேட்டதையெல்லாம் கடனைப் புரட்டிக் கொடுத்தேன்… எனக்குச் சம்பளம் வெறும் எண்ணூறு ரூபாய்… என்னால என்ன செய்ய முடியும்… இப்பவே கண்பார்வை சரியில்லே… வேலைக்கு சரிப்பட்டு வராது… வேறு இடத்தில் வேலை பார்த்துக்குங்கன்னு முதலாளி சொல்லிக்கிட்டிருக்காரு…”
     தகப்பனைப் பார்த்த அவளது பார்வையில் பரிதாபம் தெரிந்தது.
     ‘சரி எட்டு மணிக்கு வேலைக்கு போயிட்டு வர்றேன்… என்ன பண்ணலாம்னு பார்ப்போம்…”
     கம்பெனியில் முதலாளி கொஞ்சம்  கலகலப்பாக இருந்தார். அந்த சந்தர்ப்த்தில் அவர் மனம் கனியும் என்று நெருங்கி மகளின் பிரச்சினையைச் சொன்னார்.
     “வயதைப் பார்த்து பரிதாபப்பட்டுத்தான் இந்த வேலையையே தந்திருக்கேன்… வேலை பார்க்கணும்னா பாரும்… கடன் அது இதுன்னு கேட்டா சரிப்பட்டு வராது…”
ராமலிங்கம் கூனிக்குறுகி வெளியில் வந்தார். மதியத்துக்கு கொண்டு போயிருந்த கஞ்சியைக்கூட அவர் தொடவில்லை.
இரவில் மகளிடம் தன் திட்டத்தைச் சொன்னார்.
“நம்ம உறவுக்காரங்க நிறைய பேர் சென்னையில் இருக்காங்கம்மா… நிலமையைச் சொன்னா கொஞ்சமாவது உதவுவாங்க… காலையில் நான் சென்னைக்கு புறப்படுறேன்… பெட்டியில் ஜந்நூறு ரூபாய் இருக்கு…. சமையலுக்கும், குழந்தைகளுக்கும் வேணும்கிறதை வாங்கிக்க… உன் கணவன் கேட்டதை கொடுத்துடலாம்….” சொன்ன ராமலிங்கம், சென்னைக்குப் பேருந்து ஏறினார்.
அவருக்குத் தெரியும். உறவுக்காரர்கள் யாரும் உதவமாட்டார்கள். இருப்பினும் சென்னைதான் அவருக்கு இப்போதைக்குச் சரியான இடம்.
சென்னையில் வந்து பாரிமுனையில் இறங்கிய போது நள்ளிரவு. தூக்கமும் துக்கமும் அவரை வதைத்தன. இரவுப் பொழுதை பேருந்து நிலையத்திலேயே கழித்தார்.
காலையில் எழுந்தார் துணிப்பையில் வைத்திருந்த அலுமினியத் தட்டை எடுத்தார். கண்களில் கண்ணீர் பீறிட… கைகள் நடுங்க…. கால்கள் தடுமாற ஒவ்வொருவரையும் நெருங்கினார்.
“ஐயா… பிச்சை போடுங்க சாமி….
தட்டில் நாணயங்கள் விழத் தொடங்கின.
அப்பா, சென்னைக்குப் போய் ஒரு மாதமாகிவிட்டது. தகவல் ஏதும் இல்லை.
கலைவாணி கவலைப்பட்டபோது ஜந்நூறு ரூபாய் பணவிடையும், கடிதமும் வந்தன.
அவளைக் கவலைப்பட வேண்டாமென்றும்… இன்னும் சில மாதங்களில் முழு தொகையான இருபதாயிரம் பணத்தோடு வந்துவிடுவேன் என்றும் எழுதி இருந்தார்.
அப்பாவால் எப்படி அவ்வளவு பணத்தை புரட்டி வர முடியும்… நமக்காக என்னென்ன வேதனைகளை அனுபவிக்கிறாரோ…. அவளது கண்களில் கண்ணீர் கரை புரண்டத.
அவர்களின் ஊராரில் சென்னையில் தங்கி வியாபாரம் செய்பவர்கள் நிறைய பேர் உண்டு. அவர்களில் வடக்குத் தெரு பால்துரை சித்தப்பா, ஊருக்கு வந்ததும் வராததுமாய் அவளைத் தேடி வந்தார்.
அவர் சொன்ன தகவலைக் கேட்டு கலைவாணி நெஞ்சைப் பிடித்துக் கொண்டாள்.
“சென்னையில் அப்பா பிச்சை எடுக்கிறாரா? வறுமையில் வாழ்ந்த போதும் மானத்துடன் வாழ்ந்த அப்பா… கையில் தட்டுடன்… அய்யோ கடவுளே… “ என்று சுவரில் முட்டினாள்.
அவள் கதறிய கதறலில் குழந்தைகள் மட்டுமல்ல, பால்துரையும்கூட ஆடிப்போனார்.
அம்மன் கொடை முடிந்து பால்துரை சித்தப்பா புறப்பட்டபோது, குழந்தைகளை பக்கத்து வீட்டில் விட்டுவிட்டு அவளும் பேருந்து ஏறினாள். சென்னை வந்து, அந்தப் பரிதாபத்தை நேரில் பார்த்தாள். அப்பாவைக் கட்டிக் கொண்டு அழுதாள்.
“அப்பா… எனக்கு தாம்பத்திய வாழ்க்கையே வேண்டாம்ப்பா… வாங்கப்பா ஊருக்கு போவோம்… நான் பீடி சுற்றி என் குழந்தைகளை காப்பாத்துவேன்…”
 அன்றே அவர்கள் ஊருக்கு பேருந்து ஏறினார்கள். அப்பாவின் தளர்ந்தகரத்தை கலைவாணி ஆதரவுடன் பற்றிக்கொண்டாள்.
“பிச்சை எடுக்கிற நிலைமைக்கு உங்களை ஆக்கின பாவிகூட நான் வாழவே மாட்டேன்பா… என்னை வச்சி வாழறேன்னு உண்மையான அன்போட ஊனமுற்றவன் வந்தாலும் நான் ஏத்துக்குவேன்… என்னைப் பற்றி கவலைப்படாதீங்கப்பா…” மெதுவாய்ச் சொன்னாள். ஆனாலும் அவள் கண்களில் கண்ணீர் கொட்டியது.
மகளின் வார்த்தைகள் மனதில் ஆறுதலாய் பதிய, பேருந்தின் சீரான ஓட்டத்தில் குளிர்ந்த காற்றின் மயக்கத்தில் அவர் நிம்மதியாகத் தூங்கிப் போனார்.
ழூழூழூழூழூ

ராணி

02.12.2001

எல்லாம் கனவாக ...!

எல்லாம் கனவாக…!
     அந்தச் செய்தி மலர்விழியை பேரிடியாய்த் தாக்கியிருக்க வேண்டும் கல்லூரி வகுப்பறையில் கற்சிலை போல் அமர்ந்திருந்தாள். அதைச் சொல்லியிருக்க வேண்டாமோ என்று தோன்றியது வாசுகிக்கு. என்ன செய்வது… மலர்விழியைப் போன்று அழகிலும் அறிவிலும் உயர்வான ஒரு பெண் வஞ்சகவலையில் விழுந்து வாழ்க்கையைத் தொலைத்துவிடக்கூடாதே.
     மன்னர் மன்னனிடம் இவ்வளவு மர்மங்கள் இருக்கும் என்று எந்தப் பெண்தான் எதிர்பார்த்திருக்க முடியும். அந்தக் கவிதை பேசும் கண்கள் பொய்மையும் பேசுமா. பூரணச் சந்திரன் போன்று களங்கமற்ற முகம் நெருப்பையும் கக்குமா… வைரம் பாய்ந்த அந்த தடந்தோள்களுக்குள் வாழ்க்கையின் சூன்யங்களா…
     அபாரமான அவனது கட்டழகு.. சிந்தனை மெருகுடன் அவன் சிந்தும் சொற் சித்திரங்கள்… புன்னகையைச் சிந்தும் வதனம்… வேங்கையின் நடை எவ்வளவு எதிர்பார்ப்பையும் தாகத்தையும் தரும் என்பதை இளவயதுப் பெண்கள் அறிவார்கள். இத்தனை கணைகளையும் தொடுத்துத்தான் மலர்விழியை அவன் நெஞ்சச் சிறையில் வீழ்த்தியிருந்தான். மலர்விழி அவனுக்காக எல்லாவற்றையும் இழக்கத் தயாராக இருந்தாள்.
     அவன் சென்னை மாநகரின் பெரிய நகைக்கடை அதிபரின் மகன் என்பதற்காக அவள் மையல் கொள்ளவில்லை. ஒபெல் ஆஸ்ட்ரோ… டோயோட்டா.. மாருதிசென் சியல்லோ கார்களில் அவன் வருவதால் அவனிடம் மயங்கிப் போகவில்லை. உலகையே வெற்றி கொள்ளப் போகும் ஒரு துடிப்புள்ள இளைஞனாக அவனைக் கருதியிருக்க வேண்டும். அவன் நெஞ்சத்தில் விழுந்துபுரளும் பாக்கியசாலி தான் மட்டுமே என்ற பேராசை இருந்திருக்க வேண்டும். அவனது சூர்யபார்வை தன்மீதுதான் சஞ்சரிக்க வேண்டும் என்ற தவிப்பு இருந்திருக்க வேண்டும். எல்லாம் கனவாக கானல் நீராக நொடிப் பொழுதில் மாறிப்போனது.
     வாசுகி கேள்விப்பட்ட அவனைப் பற்றிய அந்த உண்மைகள் எரிமலைக்கனல் போன்றவை. வாசுகியின் அத்தை மகள் டாக்டர் பூங்கனி தவறான தகவலைத் தரமாட்டாள்.
     ‘ஐந்து நட்சத்திர விடுதிகளில்… மங்கிய ஒளிச்சிதறலில்.. மதுவில் மயங்குவதில் அவன் உண்மையிலேயே மன்னனாம்… உயர்ந்த விலையில் கிடைக்கும் பெண்களுக்காக அள்ளி வீசுவானாம்… அவனுக்காகவே ஆடை அவிழ்ப்பு நடனங்கள் நடைபெறுமாம்… மலர்விழி அற்புதமான அழகி என்பதால் இந்த வண்டு தேன்குடிக்க ரீங்காரமிடுகிறதாம். தேனுண்டபின் வேறு மலருக்குத் தாவிச் சென்றுவிடுமாம்..’
            வாசுகி மலர்விழியை மெல்ல நெருங்கி தழுவிக் கொண்டாள். ‘மலர்விழி உன்னை போன்றவர்கள் இப்படி இடிந்து போய்விடக்கூடாது… நல்ல நேரத்துல உண்மை தெரிஞ்சதுக்காக சந்தோஷப்படு… உனக்காக ராஜகுமாரர்கள் காத்து நிப்பாங்க…’
     நெஞ்சு அடைக்க மலர்விழி பதில் சொன்னாள்.
     “அந்த ஆள்கிட்டே நிறைய கடிதம் கொடுத்திருக்கேன்டி.. இரண்டு பேருமா ரொம்ப நெருக்கமா இருக்கிற புகைப்படங்கள் தனி ஆல்பமே வரும்… அது மட்டுமல்ல.. என்னோட நெளிவு மோதிரம் அவன் கையிலே…”
            “வேற ஒண்ணும் ஆயிரல்லியே…”
     “கடவுள் மீது ஆணையா சொல்றேன்… அந்த ஆள் விரல்கூட என்னைத் தீண்டியது இல்லை. ஆனா இப்பத் தெரியுது… திட்டம் போட்டுத்தான் என்கிட்டே நல்லவன் மாதிரி நடிச்சிருக்கான். என் கடிதங்கள், போட்டோக்களை வச்சி என் வாழ்க்கையையே பாழடிச்சிருவானே.. எல்லாம் போச்சே…”
     “உன்னை தைரியசாலின்னு நினைச்சேன் மலர். இந்த உண்மையெல்லாம் தெரிஞ்சாக்கூட உன்னை யாரும் குற்றம் சொல்ல மாட்டாங்க. அவன் வலையிலே விழாம தப்பிச்சதைத்தான் பெரிய புண்ணியம்னு சொல்லுவாங்க…”
     “இன்றைக்கு மெரினாவுக்கு வரச்சொல்லியிருக்காண்டி…”
     “தவறாம மெரினா போ… அவன்கிட்டே என் வழியிலே இனிமே வராதேன்னு தைரியமா சொல்லு… வந்தா நாறிப் போயிருவேன்னு எச்சரிக்கை பண்ணிரு.. அவன் என்ன பிரச்சனை பண்ணினாலும் அதை சந்திப்போம்.. இவனுகளுக்கு அடிமைகளாகப் போறது தலை எழுத்தா என்ன.”  
     மலர்விழி புதுத்தெம்புடன் எழுந்து விடைபெற்றாள். வீட்டிற்கு வந்ததும் பூஜை அறையில் தியானித்தாள். அம்மாவிடம் அமெரிக்கன் நூலகம் போவதாகப் பொய் சொன்னாள். மெரினா கடற்கரையை அவள் அடைந்தபோது மாலை மணி ஆறு. மன்னர் மன்னன் வழக்கமாக அமரும் இடத்தில் அமர்ந்து கடல் அலைகளில் அதன் எழுச்சிகளில் லயித்துப் போயிருந்தான்.
     மலர்விழி மெல்லச் செருமினாள். திடுக்கிட்டுத் திரும்பியவன் உற்சாகத்துடன் ‘வா மலர்’ என்றான். அவள் கண்களில் காளியின் ரௌத்திரம்.
     “என்ன ஆச்சு என் கண்ணம்மா…”
     நிதானமும் தியானமும் கட்டுப்பாட்டை இழக்க அவள் கைகள் அவளை அறியாமல் ஆவேசத்துடன் அவன் கன்னங்களில் இறங்கின. அவன் அதிர்ச்சியில் உறைந்து நிற்க…
     ‘என்னை ஏமாற்றிவிட்டாயேடா… பாவி… உன் வேடம் வெளுத்துருச்சுடா..’
     அவனைப்பற்றி கேள்விப்பட்ட அத்தனையையும் பொழிந்து தள்ளினாள். கதறிக் கண்ணீர் விட்டாள். மன்னர் மன்னன் கடற்கரை கூட்டத்தில் அத்தனை பேர் மத்தியில் தனக்கு ஏற்பட்ட அவமானத்தை மிகுந்த தைரியத்துடன் தாங்கிக் கொண்டான்.
     “நான் நல்லவன்னு எந்த சந்தர்ப்பத்திலேயும் உன்கிட்டே சொன்னது கிடையாது. உன்னை முதல் முதல்ல எப்போ பார்த்தேனோ அப்பவே என் தவறுகள்லே இருந்து திருந்தணும்னு தீர்மானிச்சேன்… எப்படியாவது உன்னை அடையணும்ங்கறது எனது நோக்கமல்ல…”
     அவன் குரல் தழுதழுத்தது. வேங்கை போன்ற அவனது கம்பீரம் நொறுங்கிப் போனது. நிலைகுலைந்து போயிருந்தான். அவன் தன் தவறுகளை நியாயப்படுத்துவான்… தன்னை மிரட்டுவான்.. ஆணவத்துடன் நடந்து கொள்வான் என்ற அவள் எதிர்பார்ப்பு தகர்ந்துபோக கிட்டத்தட்ட மண்டியிட்ட நிலையில் இருந்த அவனது தோற்றம் அவளுக்குள் அனுதாப விதையை விதைத்தது. தான் அதிகப்படியாக நடந்து கொண்டோமா என்று மனம் தவித்தது…. அவனே பேசினான்.
     “பணம் என் புத்தியை சிதற அடிச்சுது… பணத்துக்காக நான் சந்திச்ச பெண்கள்கிட்டே பெண்மையைப் பாhத்ததில்லே… எனக்குன்னு நல்ல வாழ்க்கை அமையணும்னு ஆசைப்பட்டேன்.. அதுவும் உன்னை சந்திச்ச பிறகுதான்… அழகான உன் உடம்புக்காக நான் எடுத்த முடிவல்ல இது… உன்னைவிட அழகானவங்க பணத்தை வீசி எறிஞ்சா கிடைப்பாங்க… காமம் மட்டுமே வாழ்க்கையில்லை என்பதை எனக்கு உணர்த்தியவளே நீதான்… பெண் ஒரு பெரிய சக்கி… அதனாலே ஆக்கவும் முடியும் அழிக்கவும் முடியும்…  உன்னுடைய நினைவுகளே என்னை மனிதனாக ஆக்கியது… எனக்கு ஒரு நல்ல வாழ்க்கை கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு இருந்தேன். என்னோட கடந்தகால வாழ்க்கை பெருமைக்குரியது அல்ல… அது வெட்கப்படவேண்டியது… அதைப்பற்றி உன்கிட்டே எப்போதுமே சொல்ல விரும்பல்லே.. சாக்கடையிலே குளிக்கிறது மகிழ்ச்சிக்குரிய விஷயமா.. நான் உன்னை ஒருபோதும் ஏமாற்ற நினைக்கலே… என் மனசுல உன்னை ரொம்ப உயரத்துல வச்சிருந்தேன்..”
     மேலும் பேச முடியாமல் அவன் கண்களில் நீர் திரையிட்டது.
     “நீங்க திருந்தியிருந்தா மகிழ்ச்சிதான். இருந்தாலும் உங்க மேல இனிமேலும் அன்பு செலுத்த முடியாது. தயவுசெய்து என்னை மறந்திருங்க.. என் வாழ்க்கைத் துணைவன் இப்படித்தான் இருக்கணும்னு எனக்கு லட்சியங்கள் இருக்கு… என்னை என் பாதையிலே விட்டிருங்க… என் வாழ்க்கையிலே நீங்க வந்த அடிச்சுவடே தெரியக்கூடாது…”
     அவன் குலுங்கிக் குலுங்கி அழுதான். மெல்ல சுதாரித்துக் கொண்டு எழுந்து கொண்டான்.
     “மலர் என்னோட வேண்டுகோள்… என் வீட்டு வரைக்கும் வந்திட்டுப்போ… நானே உன்னை கார்லே உங்க வீட்டுல விட்டிடுறேன்..” அவள் தயங்க…
     “இந்த ரெண்டு வருஷமா உன்கிட்டே நான் கண்ணியமா நடந்துக்கிட்டதை நீ மதிக்கிறதா இருந்தா என்னோட என் வீட்டுக்கு நம்பிக்கையோடு வா..”
     அவள் அவனோடு அந்த அழகிய டயோட்டா காரில் பயணித்தபோது அவன் எதுவும் பேச முயற்சிக்கவில்லை. தியாகராயநகரில் அந்த அழகிய பங்களாவில் அவள் கால் பதித்தபோது அந்த பங்களாவே உயிர் பெற்றதைப் போல் அத்தனை பேரும் ஓடி வந்தார்கள். அவனது அம்மா சகோதரிகள் அவளைக் கட்டித் தழுவிக் கொண்டார்கள். அவனது அம்மா குங்குமச்சிமிழை நீட்டியபடி “என் பையன் திருந்துவான்னு நான் எதிர்பார்க்கவே இல்லம்மா… எங்களுக்கெல்லாம் தெய்வம் நீ…”
     மன்னர்மன்னன் நொடி நேரத்தில் அவனது அறைக்குள் சென்று திரும்பினான். அத்தனை பேர் முன்னிலையிலும் தெளிவாகப் பேசினான்.
     “மலர்.. இதோ நீ எனக்கு அனுப்பிய கடிதங்கள்… நாமிருவரும் இருக்கும் புகைப்பட ஆல்பங்கள்… அவைகளின் நெகடிவ்கள்… இதோ எனக்குப் பரிசாகத் தந்த மோதிரம்… இவைகளை உன் கையினாலேயே அழிச்சிரு… உன்னை ஏமாற்றியதாக நினைச்சா மன்னிச்சிரு..”
     “என்னடா இதெல்லாம்..” தாய் விக்;கித்து நிற்க மலரோடு மீண்டும் வெளியில் வந்து காரைக் கிளப்பினான்.
     அவன் எத்தகைய பண்பட்ட மனிதன் என்று அந்த கணத்தில் புரிந்தது. நெஞ்சு சிலிர்த்தது. காமத்தை வைத்து ஒருவனை தீர்மானிக்க முடியுமா என்று சந்தேகம் வந்தது. கார் அவளது வீடு நோக்கி விரைந்து கொண்டிருந்தது. மயிலாப்பூர் லஸ் முனையில் அவள் இறங்கிக் கொண்டாள். அவனிடம் என்ன சொல்லி விடைபெறுவது என்று தோன்றாமல் தவித்துக் கொண்டிருந்தாள்.
     “மலர் போய்வா… என்னைவிட்டுப் போவது நீ மட்டுமல்ல… என்னுடைய வசந்தங்களும்தான். உன்னோடு பழகிய நாட்களை நான் என் நெஞ்சில் கிளறிப் பார்க்கமாட்டேன்… எனக்குப் புதுப்பாதை காண்பித்த தேவதை நீ… எங்கிருந்தாலும் நல்லா இரு..” ஸ்டியரிங்கில் படுத்தபடி அழுதான். அவள் இன்னும் விடைபெறவில்லை. அவளது பதிலுக்குக் காத்திராமல் மெல்ல காரை நகர்த்தினான்.
----------------------------------------------------------------------------------------------------------------

தேவி

01.11.2000

நந்து.. நந்துக்குட்டி...

நந்து… நந்துக்குட்டி…!
     புகுந்த வீட்டில நந்தினி அடி எடுத்து வைத்தபோது மாமனார், மாமியார், நாத்தனார், கொழுந்தன் நால்வரும் அவளை அதிருப்தியுடன் பார்த்தனர். கணவன் சிவராமனுக்கு மட்டும் அவள் மீது அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தது.
     நந்தினியின் தந்தை நரசிம்மன் சாதாரண பள்ளிக்கூட வாட்ச்மேன். நந்தினிதான் மூத்தவள். நான்கு பெண்பிள்ளைகளைப் பெற்றுவிட்ட நரசிம்மனுக்கு, அவர்கள் எதிர்காலத்தைப் பற்றிய பயம் இருந்தது.
     நந்தினியின் அழகுக்கு சிவராமன் வசமாகிப் போனதை தனது பெண்ணுக்கு வாய்த்த அதிர்ஷடம் என்று நினைத்தார் நரசிம்மன். ஆனால், சிவராமனின் தாய் தந்தையர் சுரத்தில்லாமல் நடந்து கொண்டதுதான் அவரை வருத்தமடையச் செய்தது.
     புகுந்த வீட்டின் நிலைமை சில நாட்களில் நந்தினிக்குத் தெளிவாக விளங்கியது. ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியரான மாமனாரின் சேமிப்பு முழுவதும் புதிதாகக் கட்டிய வீட்டில் கரைந்து போனது தெரிந்தது. வெளியில் வட்டிக்குப் பணம் வாங்கப்பட்டிருப்பதும், மாமனாருக்கு வரும் பென்ஷன் பணம் வட்டிக்கே சரியாகிப் போவதும் புரிந்தது.
     சிவராமனுக்கு அவன் வேலை பார்க்கும் தனியார் கம்பெனியில் அறுநூறு ரூபாய்தான் சம்பளம். வெளியில் அவனுக்கு நல்ல பெயர் இருந்தது. வசதியான இடங்களிலிருந்து பெண்வீட்டார் வந்து கொண்டிருந்த நேரத்தில் இந்த வரன்களில் ஒன்று அமைந்தால் வீட்டின்மேல் இருக்கும் இருபதாயிரம் ரூபாய் கடன் சுமை தீர்ந்துபோகும் என்று வாத்தியார் கணக்குப் போட்டிருந்தார். சிவராமனின் முடிவு அவரது கணக்கைத் தப்புக் கணக்காக்கியது. திருமணவயதில் தையல் மெஷினில்  நாட்களை விரட்டிக் கொண்டிருக்கும் மகளது மண வாழ்வும், பட்டம் பெற்றபின் வேலைக்காக அலைந்து திரியும் இரண்டாவது மகனின் எதிர்காலமும் அவரைப் பேதலிக்க வைத்தன. தோளிலும் மார்பிலும் போட்டு வளர்த்த மகன் குடும்பப் பொறுப்பு இல்லாமல் நடந்து கொண்டு விட்டானே என்று மனைவியிடம் தனிமையில் புலம்பினார்.
     குடும்பச் சூழ்நிலையை உணர்ந்து நந்தினி அந்த விஷயத்தில் மிகவும் எச்சரிக்கையுடன் இருந்தாள்.
     “இப்போது குழந்தை வேண்டாம்…” என்று கணவனிடம் இரவில் கிசுசிசுத்தபோது….
     “குழந்தைன்னா உனக்குப் பிடிக்காதா நந்து..” என்று அப்பாவியாய்க் கேட்டான் சிவராமன். புதிய உயிரின் உடனடி வரவால் குடும்பத்தின் பொருளாதாரம் இன்னும் பாதிக்கப்படலாம் என்பதை அவள் சுட்டிக் கட்டியபோது அவனுக்கு உடம்பு சிலிர்த்தது. நடு இரவிலும் நந்தினி தூங்காமல் சிந்தனையில் இருந்தது அவனைக் குழப்பியது.
     “தூக்கம் வரலையா நந்து…?”
     “இல்லையே….”
     “பொய் சொல்றே… மணி ரெண்டாகுது… இன்னும் கொட்டக் கொட்ட விழிச்சிருந்தா என்ன அர்த்தம்…. ஏதாவது பிரச்சையா நந்து…?” அவள் பக்கம் சாய்ந்து ஆதரவுடன் அவள் முடிகளைக் கோதினான். அவளது கண்கள் பனித்தன.
     “நந்து… நந்துக்குட்டி… என்னம்மா?”
     “என்னால இந்த வீட்டுல என்ன பிரயோஜனம்னு யோசிச்சேன்.. உங்களுக்குப் பாரமாகத்தானே வந்திருக்கேன்..” தொண்டை அடைத்தது.
            “பொக்கிஷம் மாதிரி நீ கிடைச்சிருக்கியே போதாதா..”
     “அதனால பிரச்சனை தீர்ந்திருமா?”
     “இதைப் பார்… உன்னை எதுக்குக் கட்டிக்கிட்டேன் தெரியுமா…? எங்க அப்பா அம்மாவைக் கண்ணைப் போல பார்த்துக்கிடணும்… என் தம்பிக்குத் தாயா இருக்கணும். அவ்வளவுதான். எதுக்கு வீணாகப் போட்டு மனசைக் குழப்பிக்கறே… பேசாமல் படு…” அவளுக்கு ஆறுதல் சொன்னானே தவிர, விடியும் வரையில் சிவராமனுக்குத் தூக்கம் வரவில்லை.
     நந்தினி சீரும் சிறப்புமாக வீடு புகவில்லை என்ற குறை இருந்தபோதிலும் அவளது பணிவிடைகள் மாமனார், மாமியார் இதயத்தைத் தொட்டன. நந்தினியை வெறுப்போடு பார்த்த பார்வைகள் மாறி ‘நந்து.. நந்து..’ என்று அந்த வீடே அவள் பின்னால் சுற்றிவரத் துவங்கியது.
     அன்று விடுமுறை, சிவராமன் வராந்தாவில் பழைய இரும்பு நாற்காலிகளுக்கு பெயிண்ட் அடித்துக் கொண்டிருந்தான். உள் அறையில் கடகடவென தையல் மெஷின் ஓடிக் கொண்டிருந்தது. மாமனார் ஈஸி சேரில் சாய்ந்திருந்தார். தயங்கியபடி சிவராமனிடன் வந்தாள் நந்தினி.
     “என்ன… நந்து…?”
            “புடவை வாங்கணும்.. நீங்க வேலை பார்க்கிற முதலாளிகிட்டே ரெண்டாயிரம் ரூபாய் அட்வான்ஸ் வாங்க முடியுமா?”
     சிவராமன் மிரண்டான்.
     “வீட்டுக் கடனே நிறைய இருக்கு.. இது தெரிஞ்சுமா கேட்கறே…?
     “கண்டிப்பா வேணுங்க..” அவள் என்னதான் வராந்தாவில் இருந்த கணவனிடம் மெதுவாகக் கேட்டாலும் ஹாலில் இருந்த மாமனாரின் காதில் தெளிவாக விழவே செய்தது. அதிர்ச்சியுடனும் வெறுப்புடனும் எழுந்து வந்தார்.
     “ஏண்டா, மடையா.. அவ கல்யாணம் முடிஞ்சு நம்ம வீட்டுக்கு வந்து ஒரு வருஷமாகுது. ஒரு புடவையாவது எடுத்துக் கொடுத்திருப்பியா.. நாளைக்கு முதலாளியைப் பார்த்துப் பேசி எப்படியாவது பணத்தை வாங்கிரு… அவளைக் கூட்டிக்கிட்டுப் போய் வேண்டிய புடவையை வாங்கிக் கொடு… பழைய கடனோடு இன்னும் இரண்டாயிரம்… அவ்வளவுதானே…”
     உள் அறையில் இருந்து எட்டிப் பார்த்த மாமியாருக்கும் விஷயம் விளங்கியது. இரண்டாயிரம் ரூபாய் கேட்கிறாள் என்றதும் உடம்பு ஆடியது. பெண்ணிடம் முணுமுணுத்தாள்.
     “இவ்வளவுதானா இவள்…” தாயும் மகளும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். தாயிடம் மகள் கேட்டாள்…
     “என்ன திடீர்னு புடவை ஆசை…?”
     “அவங்க ஊர்ல திருவிழா… பட்டு உடுத்திக்கிட்டுப் போகணும்னு ஆசை வந்திருக்கும்…”
     மகளின் கால்கள் வெறித்தனமாக தையல் மெஷினை இயக்கின.
     மாதத்துக்கு நூறு ரூபாய் பிடித்துக் கொள்ளப்படும் என்ற சம்மதத்துடன் இரண்டாயிரம் ரூபாயை எண்ணிப் போட்டார் முதலாளி. அரை நாள் லீவு கேட்டு ஜவுளிக் கடைக்கு நந்தினியோடு வந்தான். கடைக்குள் அவளை அனுமதித்துவிட்டு வெளியே நின்று கொண்டான்.
     இரண்டு மணி நேரத்துக்குப் பிறகு அவள் குரல் கேட்டது.
     “ஏங்க… இதைக் கொஞ்சம் தூக்கிக்க முடியுமா…?”
     “உங்க அப்பா வீட்டுலேருந்து வாங்கிக்கிட்டு வர்ற மாதிரியில்ல தெரியுது…” அவனையறியாமல் சுடுசொற்கள் சிதறின.
     வீடு வந்த பிறகு கூடத்தில் பாயில் அடுக்கி வைக்கப்பட்ட முப்பது புடவைகளைப் பார்த்து அனைவரும் வெகுண்டு போனார்கள். நாத்தனார், நந்தினிக்கு கேட்பது மாதிரி சத்தமாகவே தன் தாயிடம் சொன்னாள்.
     “இந்த அண்ணி பேராசைக்காரி… சே…”
     சிறிது நேரத்தில் வயர்கூடை நிறைய புடவைகளுடன் நந்தினி புறப்பட்டதும் அனைவரும் புரியாமல் விழித்தனர். மாமனாரை நெருங்கியவள் கால்களைத் தொட்டு வணங்கினாள்.
     “என்னை ஆசீர்வாதம் பண்ணுங்க மாமா… தவணை முறையில் புடவை வியாபாரம் பண்ணப் போறேன்… முதல்லேயே சொன்னா ஆளுக்கொரு அபிப்பிராயமா சொல்லித் திட்டத்தைச் செயல்படுத்த முடியாம ஆயிரும்னு சொல்லலை… துணிஞ்சு இறங்கிட்டேன்.. இதுல வர்ற வருமானம் வீட்டுக் கடனை அடைக்கறதுக்கு உதவியா இருக்கும்.”
     ‘இந்தப் பெண்ணையா தவறாக நினைத்தோம்’ பொங்கிய நெஞ்சமெல்லாம் விம்மின. கண்களில் நீர் பெருக மாமியார் ஒடிவந்து நந்தினியைக் கட்டிக் கொண்டு “நந்து… நந்துக்குட்டி…” கன்னங்களில் திரும்பத் திரும்ப முத்தமிட்டாள்.
......................................................................................................................

ஆனந்த விகடன்

25.03.90

இதயம் இருக்கிறது

இதயம் இருக்கிறது
     வானத்தில் இரவுப் பூக்கள் பூத்திருந்தன. காற்று பேய் வேகத்தில் இரைந்து கொண்டிருந்தது. தென்னந்தோப்பின் ஓலைகள் சரசரவென ஒன்றோடொன்று உரசி அந்த இரவிலும் பயங்கரத்தை தோற்றுவித்துக் கொண்டிருந்தன.
     வேலய்யா விழித்துக் கொண்டான். நேரம் நடுச்சாமமாக இருக்கக் கூடும் என்று யூகித்தான். பக்கத்தில் பொன்னி சுருண்டு கிடந்தாள்.
     “ஏ புள்ள எழுந்திரு.. நேரமாகுது…
     அவள் உடலை நெளித்தபடி எழுந்து உட்கார்ந்தாள்.
     இப்போதுதான் தூங்கத் தொடங்கியது போல் இருந்தது. அதற்குள் நள்ளிரவு நெருங்கி விட்டதா?
     முன்தினம் பொழுது சாய்ந்து கொண்டிருந்த பொழுது இளந்தோப்புகளுக்கு தண்ணீர் பாய்த்து முடித்திருந்தான் வேலய்யா. பொன்னி தட்டி வியாபாரிகளுக்கு பாக்கி இருந்த தட்டிகளைப் பின்னி முடித்திருந்தாள். சமைத்து முடிக்கும்  போது மணி எட்டைக் கடந்திருந்தது. இரண்டு வயது சோமுவையும், ஆறு வயது வள்ளியையும் தூங்கப் பண்ணிய பின் அவளுக்கு கண் இருண்டு கொண்டு வந்தது. அசதியில் அப்படியே சாய்ந்து தூங்கிப் போனாள். வேலய்யா வெளியில் கிடந்த தென்னந்தட்டியில் முடங்கியிருந்தான்.
     அதன் பிறகு நள்ளிரவில் தான் மூன்று லைன் கனெக்சன் கிடைக்கும். மூன்று லைனிலும் மின்சாரம் இருந்தால் தான் மோட்டார் ஓடும். இரண்டாயிரம் வாழைக்கு இன்று இரவுமுறை வைத்திருந்தார் முதலாளி. இறைத்தாக வேண்டும்.
     “லைட்டை பத்த வச்சுட்டியா?”
     “ம்…!”
     “லைட் தொங்க போட கம்பியை எங்க புள்ள…?”
            “இதோ எடுத்துத்தாரேன்!”
     “குடிசைப் படலையைச் சாத்திப்போடு. காத்து வேகமாக அடிக்குது. புள்ளைங்க முழிச்சிக்கிட்டு அழுதிட்டு கிடக்கும்…!”
     கருப்பன் வந்து வாலை ஆட்டிக் கொண்டு நின்றது. தாழ்வார தொழுவத்தில் வண்டி மாடுகளின் மணிச் சத்தம் கிணிங் கிணிங் என்று கேட்டுக்கொண்டிருந்தது.
     “நில்லு புள்ள! மோட்டாரை தட்டி விட்டுட்டு வந்துடறேன்.” மோட்டார் அறைக்குள் நுழைந்து கரண்டை சோதித்தான். ஸ்டார்டரின் பச்சை பட்டனை அமுக்கினான். மோட்டார் கடகடவென இறைந்தது. தண்ணீர் வரவில்லை.
     “முதலாளி கிட்ட குட்வால்வ் வாசரை மாத்தணும் மாத்தணும்னு சொல்றேன். காதுலேயே போட்டுக்க மாட்டேங்கறாரு… கொஞ்சம் சாணி இருந்தா எடுத்தா புள்ள…!”
            லைட்டையும் இரும்புக் கம்பியையும் கீழே வைத்து விட்டு பழைய தோண்டியில் சாணத்தை அள்ளிக் கொண்டாள். வாளியில் கரைத்தாள். மூன்று இஞ்ச் இரும்புக் குழாயில் ஊற்றினாள். சரசரவென அது இறங்கிற்று.
     மடமடவென நான்கைந்து வாளித் தண்ணீரை எடுத்து வந்து தொடர்ந்து ஊற்றினான், வேலய்யா! தொட்டியில் இருந்து இறங்கி வந்து மீண்டும் ஸ்டார்ட்டரை அமுக்கினான். அமைதியாக அந்தப் பழைய மோட்டார் ஒடியது. தண்ணீரை வாரி இறைத்தது….!
     “வா போகலாம்….!”
     லைட்டை அவள் தூக்கி;க் கொண்டாள். இடுப்பில் அரிவாளை தொங்க விட்டு கம்பியையும், மண் வெட்டியையும் கையில் எடுத்துக் கொண்டான்.
     “பகல்லே ஒழுங்கா கரண்ட் வந்திச்சுன்னா இவ்வளவு தொந்தரவில்லே…!”
     “என்ன பண்றது? நாமபடுற அவதிய இந்த நாட்டை ஆள்றவுங்க கவனிக்கவா போறாங்க….?”
            “ஐயோ அம்மா! பாம்பு காலைச் சுத்திகிட்டுதே!”
     “அசையாம, பயப்படாம நில்லு….!”
     அவள் கையில் இருந்த லைட்டை வாங்கி நிதானமாக சோதித்தான். பாம்பு மஞ்சள் கலரில் தடியாகத் தெரிந்தது.
     “சாரைதான்… ஒண்ணும் பண்ணாது…!
     வாலைப் பிடித்து இழுத்து சுழற்றி தூர எறிந்தான். அவள் இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை.
     “நான் வர்லைங்க.. திரும்பிப் போயிர்றேன்… எனக்கென்னமோ பயமா இருக்கு… புள்ளைங்க வேற தனியா இருக்காங்க.”
     “போடி பைத்தியம்….! இந்தப் பாம்புக்கெல்லாம் பயந்துகிட்டு.. தினமும் எத்தனைப் பாம்பைப் பார்க்கிறேன்..! நீ வா.. நீ போயிட்டியானா எனக்கு வேலையே ஓடாது…!”
     அவன் நடந்தான்… அவள் தொடர்ந்தாள்…
     தென்னந்தோப்பைக் கடந்து வாழைத் தோட்டத்திற்குள் வந்தார்கள்.
     பொன்னி சேலையை முழங்கால் வரை சேறுபடாமலிருப்பதற்காக தூக்கிச் சொருவியிருந்தாள். மங்கிய லைட் வெளிச்சத்தில் கட்டுக்குலையாத அவள் அழகு அபரிதமாகத் தெரிந்தது. ஏதோ கவனக் குறைவாய் பாத்தியில் காலை விட்டவள் வேலய்யா மீதே தடுமாறி விழுந்தாள். அவன் அவளைத் தாங்கிப் பிடித்துக் கொண்டான். அவள் கைகள் இறுக்கிக் கொண்டிருந்த விதம் உணர்ச்சிகளைத் தூண்டி விட்டதால் பிடியை அவன் விடவில்லை.
     அவள்  சிணுங்கினாள்.
     “விடு மச்சான்…!”
            “என்ன புள்ள எத்தனை நாளாச்சி?”
     “அதுக்கு இப்ப என்ன பண்றதாம்…? தண்ணி பாய்ச்சி முடிஞ்சப்புறம் வீட்டுக்குப் போயி….!”
     “சொல்லுவே! உனக்கென்ன?”
            “தண்ணி உடைச்சி போகுது மச்சான். முதல்ல அதைக்கவனி”
     “அது போகட்டும்! எப்படிப் போனாலும் வாழைக்குத் தானே போகுது?”
     “வாழை மரங்களின் அடியில் காய்ந்த பகுதிக்கு அவளை அள்ளித் தூக்கிச் சென்றான். அவர்கள் நாடகம் அங்கு துவங்கியது!”
     “பிள்ளைகள் தனியாக படுத்திருக்கு மச்சான்!”
     “ம்…!”
     “தண்ணி வேற தாருமாறா பாய்ஞ்சிக்கிட்டிருக்கு!”
     “ம்…!”
     “நான் சொல்றது காதுல ஏறுதா?”
     அவன் எதையும் சிந்திக்கும் நிலையில் இல்லை.
     அரைமணி நேரம் ஆயிற்று. எழுந்து கொண்ட போது பதறிப்போய் இருந்தாள். பிள்ளைகள் நினைவுக்கு  வரவே, அவள் குடிசையை நோக்கி ஓடினாள். தண்ணீர் வெள்ளக்காடாய் கிடந்தது. வெள்ளப் பெருக்கில் மணலில் ஊன்றியிருந்த லைட் விழுந்திருந்தது.
     பாத்திகளை இரவு நேரத்தில் சரிப்படுத்துவது இயலாத காரியம் என்பது வேலய்யாவுக்கு நன்றாக விளங்கியது. முதலாளி காலையில் வருவதற்குள் வரப்புகளைச் சரிப்படுத்திவிட வேண்டும். வேறு வழியி;ல்லை.
     வாய்க்காலைத் தட்டுத் தடுமாறி கண்டுபிடித்து வேறு பக்கம் தண்ணீரைத் திருப்பினான். சோர்வாக இருந்ததால் தண்ணீரை அள்ளிக் குடிக்கக் குனிந்தான். முகத்தில் டார்ச் லைட் வெளிச்சம் விழுந்தது.
     “யார் அது?” இடுப்பில் சொருவியிருந்த அரிவாளுடன் எழுந்து கொண்டான்.
     அவ்வப்பபோது தேங்காய்கள் திருடு போய்க் கொண்டிருந்ததால் திருட்டுப் பயல்களோ என்ற சந்தேகம் அவனுக்கு…
     “அரிவாளைக் கீழே போடுடா!”
     முதலாளியின் குரல் அல்லவா இது.
     “எசமான் நீங்களா… இந்த இருட்டுல…?”
     “ஆமாண்டா தண்ணி ஒழுங்கா பாய்க்கிறியா என்னண்ணு திடீர் சோதனை பண்ணிட்டுப் போகலாம்னு வந்தேன். என்னடா இது காடுமேடா தண்ணி கெட்டி நிக்குது. பாத்தியெல்லாம் அழிஞ்சி தண்ணி பாய்ஞ்சிருக்கு. மோட்டாரை தட்டி விட்டுட்டு தூங்கித் தொலைச்சியா? ஓடிப் போயி மோட்டாரை நிறுத்துடா! லைட்டும் இல்லியா? போடா அறிவு கெட்டவனே…!”
     வேலய்யா விரைந்து ஓடினான். மோட்;டாரை தட்டுத் தடுமாறி ஆப் பண்ணினான். விளக்கை பற்ற வைத்தான். அந்த வெளிச்சத்தில் நாற்காலியைத் தூக்கி வந்து போட்டாள்,
பொன்னி.

     முதலாளி அமரவில்லை அவர் கோபத்தில் இருப்பதை உணர முடிந்தது.
    
     பொன்னி குடிசைக்குள் போகத் திரும்பிய போது வெளிச்சத்தில் அவளது முதுகுப்பகுதி துல்லியமாகத் தெரிந்தது. திட்டுத் திட்டமாக செம்மன் கரை அவள் ஜாக்கெட்டிலும், சேலையிலும் இருந்தது. பின் தலையிலும் சிறுசிறு வாழைச் சருகுகள் கூடு கட்டியிருந்தன.

     முதலாளிக்கு உடம்புதான் கனமே தவிர உள்ளம் கனத்திருக்கவில்லை. அர்த்த ஜாமத்திலும் வாழைத் தோட்டத்திற்குள் சிரத்தையாக வேலய்யா நின்றிருந்தது அவன் வேலை செய்ய ஆர்வமுடன் இருந்திருக்கிறான் என்பதை உணர்த்தியது.
    
     பாவம் சின்னஞ் சிறுசுகள் ஒன்றை ஒன்று புரிந்து கொள்ளக் கூட நேரம் கிடைக்கவில்லை. என்ன செய்வார்கள்?
    
     “சரி வேலய்யா, நான் வாறேன்! காலையிலேயே பாத்திகளைச் சரி பண்ணிடு!”
    
     பொன்னியின் முதுகையும் தலையையும் முதலாளி தன் பார்வையால் ஆராய்ச்சி பண்ணிய போதே காரியம் கெட்டு விட்டது என்று கருதினான் வேலய்யா. அவருக்கும் இதயம் இருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டான்.
    
     அவர் தலை மறைந்ததும் மனைவியைப் பார்த்து அர்த்தத்துடன் சிரித்துக் கொண்டான்.

.....................................................................................................................................


தேவி

09.11.88

கடன்

கடன்
     பண்ணையார் குணசேகரன் பங்களா மாடியில் அமர்ந்திருந்தார். அவர் அமர்ந்திருந்த அந்தப் பிரதானப் பகுதி நீள அகலத்தில் மிகவும் விஸ்தாரமாக இருந்தது. வடக்கு மூலையில் பழமையான மேலை நாட்டுப் பியானோ. எல்லா பக்கங்களிலும் ஆளுயர சாளரங்கள். பர்மா தேக்குக் கூரை. சுவரில் பெரிய பெரிய பிரேம்களில் பல வண்ண ஓவியங்கள். இந்த விஸ்தாரமான அறையைத் தவிர இன்னும் ஏழு பெரிய அறைகள். மாடிப்படிகளில் வைதேகி ஏறி வரும் சத்தம் கேட்டது.
     “என்னங்க… மதியச் சாப்பாட்டுக்கு அப்புறம் கொஞ்சம் ஓய்வெடுத்துக்கறேன்னு சொல்லிட்டு வந்தீங்க… படுக்கையறையில இல்லாம இங்கே ஹால்ல உட்கார்ந்து என்ன பண்ணிட்டு இருக்கீங்க..”
     குணசேகரன் காப்பியைப் பருகிக்கொண்டே புன்னகையுடன் வைதேகியைப் பார்த்தார்.
     “வேற ஒண்ணுமில்ல… நம்ம பரம்பரையைப் பற்றி யோசிச்சிப் பார்த்தேன். எங்க தாத்தா எப்படி வாழ்ந்தார்னு உனக்குத் தெரியுமா?...
     “அவருக்கென்ன… பர்மாவில போயி சம்பாதிச்சிட்டு வந்தார்… நாலு குளத்தடி நஞ்சை.. ஜநூறு ஏக்கரா புஞ்சை… அவரு பேரைத்தான் இப்பவும் ஊரு சொல்லுதே.”
     “ஊரு வேற என்ன சொல்லுது.?”
     “அவரு கோட்டை கட்டி ஆண்ட கதை நான் சொல்லித்தான் உங்களுக்குத் தெரியணுமா.”
     “அதில்லேம்மா.. ஊரூரூக்கு அவருக்கு வைப்பாட்டி இருந்த கதையும் உனக்குத் தெரியணுமே.”
     “சே… எதைத்தான் பேசறதுன்னு விவஸ்தையில்லாம இது என்ன பேச்சு.”
            “பின்னே… சொல்றதா இருந்தா எல்லாத்தையும்தான் சொல்லணும். எங்க தாத்தா பக்கத்து ஊர்கள்ல வைப்பாட்டி வச்சிருந்தார்னா… எங்க அப்பா இன்னும் கொஞ்சம் மேல போயி பட்டணத்திலே வைப்பாட்டி வச்சிருந்தாரு. அந்தக்கால நடிகைகள்ல ஓண்ணு ரெண்டு பேரு எங்க அப்பாவுக்கு மட்டும் ஆடிக் காட்டினாங்க… என்னா பெருமை பார்த்தியா?”
     “நீங்க மட்டும் என்னவாம்?”
     “என் உடம்பிலே ஓடுறதும் அந்த ரத்தம்தானே… அந்தப் பாதையை சிந்திக்காம இருக்குமா. நானும் தவறியவன்தான்… அந்த வயசுல நீ என்னமா இருப்பே தெரியுமா. திரும்பவும் அந்தக் காலக் கட்டத்துக்கே போயிரலாம்னு தோணும். உன் கிட்டே அழகு இருந்திச்சு. அரவணைப்பு இருந்திச்சு. எல்லாமா சேர்ந்து என்னைத் தடுமாறவிடாம கட்டிப் போட்டிருச்சு..”
     “எதுக்காக இந்த ஆராய்ச்சி.”
     “சொல்றேன்.. தாத்தாகிட்டேயும் நிறையப் பணம் இருந்திச்சி.. அப்பா கிட்டேயும் இருந்திச்சி… இப்ப கோடி கோடியா நம்ம கிட்டேயும் இருக்குது. இவ்வளவு இருந்தும் பிறந்த மண்ணுக்கு உருப்படியா எதையாவது செஞ்சிருக்கோமான்னு மனசு கேள்வியா கேட்குது. மூணு தலை முறையிலும் சொத்துக்களைத்தான் பெருக்கிட்டு வந்திருக்கோம். நம்மைச் சுத்தி இருக்கிறவங்களுக்கு என்ன செய்தோம்ங்கிறதுதான் கொஞ்ச நாளா என்னோட சிந்தனை. வைப்பாட்டி வச்சிக்கறதும் ஆடம்பரமா செலவு பண்றதும் ஒரு பரம்பரைக்குப் பெருமை தேடித்தராது வைதேகி.. நம்ம பணத்திலே மற்றவங்களுக்காக உருப்படியா எதையாவது செய்திருக்கோமா?”
     “எனக்கு என்னங்க தெரியும்”
     “இருந்தாத்தானே சொல்றதுக்கு… தாத்தா, அப்பா, நான் எல்லாருமே ஒண்ணைப் பத்தா ஆக்கியிருக்கோம். அவ்வளவுதான்… இப்ப நம்ம பையன்க இரண்டு பேரையும் டாக்டராகவும் என்சினியராகவும் ஆக்கிவிட்டிருக்கோம்… ரெண்டு பேரும் மெட்ராஸ்ல ஏகமா சம்பாதிக்கறாங்க.”
            “செல்வம் குறையாம இருக்கிறது பெரிய பிராப்தம் இல்லையா.”
     “பிராப்தம்தான். செல்வத்தை நாலு தலைமுறையாக் குறைவில்லாம ஆண்டவன் தந்திருக்காரு! எதுக்கு, நாம மட்டும் அனுபவிக்கிறதுக்கு இல்லே! நாலு பேருக்கு அனுசரணையா இருக்கணும்ங்கறதுக்குத்தான்.”
     “ஜயா, தோட்டக்கார சுப்பையா வந்திருக்கார்.”
     வேலைக்காரியின் குரல்
     “இதோ வரேன்.”
            மனைவி வைதேகியோடு அகலமான மரப்படிகளில் விரைந்து இறங்கினார் குணசேகரன். புதிய சிந்தனையால் மனதும் உடம்பும் ஒரு சேர உற்சாகம் பிறந்தது போல் இருந்தது அவருக்கு.
     “உட்காருங்க சுப்பையா.”
     நீளமான பெஞ்சில் ஓடுங்கியபடி அமர்ந்தார் சுப்பையா. குணசேகரனின் கண்கள் அவர் மீது சஞ்சரித்தன. அழுக்கடைந்த வேட்டி… கிழிந்த பனியன்… இற்றுப்போன உடல் கட்டு… குழி விழுந்த கண்கள்.
     “எப்போ இருந்து நம்ம பண்ணையில வேலை செய்யறீங்க பெரியவரே?”
     சுப்பையாக் கிழவருக்கு சிரிப்பு வந்தது.
     “என்ன முதலாளி தெரியாதது மாதிரி கேட்கறீங்க…. உங்க அப்பா காலத்தில சிறு பையனா இங்கே வேலைக்குச் சேர்ந்தேன். அன்றையில இருந்து இன்று வரைக்கும் உங்க வீட்டுக் கஞ்சிதான் முதலாளி.”
     “பிள்ளைங்க எத்தனை?”
     “மூணு பொண்ணு நாலு ஆணுங்க.”
     “பிள்ளைங்கள படிக்க வச்சிருக்கீரா.
     “எப்படி முடியும் ஜயா… எல்லாம் நம்ம பண்ணையிலதான் வேலை செய்யுது.”
     “எத்தனை பேருக்குக் கல்யாணம் ஆகியிருக்கு..”
     “ஒரு பெண்ணுக்குத்தான் முதலாளி… மச்சினன் மகனுக்கே செலவில்லாமல் கொடுத்திட்டேன்.. இன்னும் இரண்டு பொண்ணுங்க பூத்து நாளாச்சுது… கல்யாணத்துக்கு வழி தெரியாம நிக்கறேன்.”
     “இப்ப சம்பளம் எவ்வளவு வாங்கறீரு?”
     “கணக்குப் பிள்ளை எப்பவுமே நானூறு ரூபாதான் தருவாக.”
     குணசேகரனுக்குப் பொட்டில் அடித்தாற் போல் இருந்தது. அவருக்கு மாத வருமானமே பல லட்சங்கள்.
     ஆனால் அவரிடம் வேலை செய்யும் இருபது பண்ணை ஆட்களுக்கு முன்னூறும் நானூறுமாகத்தான் சம்பளம் வழங்கப்பட்டிருக்கிறது. அவர் நினைத்திருந்தால் அவர்களுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் கொடுத்திருக்கலாம். ஆனால் கொடுக்கவில்லை. ஏன்… முன்னூறு நானூறுக்கு வேலை செய்யவே ஆயிரம் ஆயிரமாய் ஆட்கள் இருந்தனர். அவர்களது குறி பசிக்கும் வயிறுதான். ஒரு நாளைக்கு ஒரு பொழுதாவது அது அடங்க வேண்டும். வாழ்நாள் முழுவதும் வாழ்க்கையே அவர்களுக்குப் போராட்டம். அந்தச் சூழ்நிலையைத் தானும் தவறாகப் பயன்படுத்தியது அவமானமாக இருந்தது. தான் மட்டும் ஆரம்பத்திலேயே சுப்பையாவுக்கும் மற்ற தொழிலாளர்களுக்கும் சிறப்பான சம்பளம் கொடுத்திருந்தால் அவர்களது பிள்ளைகள் படித்திருப்பார்கள். நல்ல உணவைச் சாப்பிட்டிருப்பார்கள். புத்தம் புதுசாய் துணி மணி அணிந்திருப்பார்கள். தெரிந்தே கொத்தடிமைகளாய் அவர்களை வைத்திருந்தது அவரை நாண வைத்தது.
     “என்ன விஷயமா வந்தீங்க பெரியவரே.”
     “அதான்.. என் முதப் பொண்ணு விஷயமாத்தான் ஜயா, பேர்காலத்துக்கு பொங்கிப் போட்டுக் கூப்பிடணும்… எசமான் ஒரு இருநூறு ரூபாய் தந்தீங்கன்னா..” குணசேகரன் எழுந்து வீட்டிற்குள் சென்றார். சுப்பையாக் கிழவருக்கு ஆச்சரியமாக இருந்தது. இதற்கு முன்னால் இது போன்ற அவசரங்களுக்கு எப்போது வந்தாலும், கணக்கு பிள்ளையைப் பாருங்க, எனக்கு என்ன தெரியும், என்று மறு பேச்சுக்கு இடம் தராமல் அகன்றுவிடும் அதே மனிதருக்கு என்ன வந்தது?
     “சம்பளம்தான் மாசம் பிறந்த உடனே வாங்கித் தொலையறியளவே… அப்புறம் என்ன அட்வான்ஸ் மண்ணாங்கட்டி.”
     என்று எரிச்சல் படாமல் சிரித்த முகமாய்… நிச்சயம் அதிசயம்தான் நடந்திருக்க வேண்டும் . சுப்பையா கிழவர் யோசனையில் ஆழ்ந்திருக்கும் போது குணசேகரன் உள்ளறையில் இருந்து வந்தார். அவரோடு வைதேகியும் வந்தாள்.
     “இந்தாங்க பெரியவரே… இது உங்களுக்குதான். “இரண்டு நூறு ரூபாய் கட்டுகள்.
     அது எதற்கு என்று தெரியாமல் கிழவர் தடுமாற…
     “பெரியவரே, இந்த இருபதாயிரத்தை முதல் கட்டமா வச்சிக்குங்க… அடுத்தாப்போல உங்க மக இரண்டு பேருக்கும் கல்யாண ஏற்பாடு செய்யுங்க… செலவுக்கு ஒரு லட்ச ரூபா தர்றேன்.”
     சுப்பையா கிழவர் மெய் நடுங்க மலைத்துப்போய் நிற்க….
     “இது உமக்கு மட்டுமல்ல ஜயா… நம்ம பண்ணையில ஊழியம் செய்யற அத்தனை பேருக்கும்தான். போயிட்டு வாங்க.”
     நடப்பது உண்மைதானா என்பதை யூகிக்க முடியாமல் அவர் வெளியேற அடியெடுத்து வைத்த போது குணசேகரன் குரல் மீண்டும் அவரைத் தேக்கியது.
     “இது உங்களுக்கு இனாமாத் தர்ற கூலி அல்ல. நீங்க உழைச்ச கூலி. இத்தனை வருசமாத் தராத கூலி. தெம்பா போயிட்டு வாங்க….”
     உணர்ச்சிப் பெருக்கோடு வெளியே நடந்த கிழவரையும், மனிதத்தன்மையோடு நடந்து கொண்ட கணவனைவும் இமைக்காமல் பார்த்தாள் வைதேகி.

......................................................................................................................
சாவி

28.02.90